புயலில் தொலைந்த ஆமையை திரும்ப பெற்ற குடும்பம்!

புயலில் தொலைந்த  ஆமையை திரும்ப பெற்ற குடும்பம்!

செல்லப் பிராணிகள் குடும்பத்து உறுப்பினராக மாறி விடுவதால், அவற்றை இழப்பது எவ்வளவு வேதனையானது என்பது இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் கொகோமோ என்ற இடத்தில் சமீபத்தில் சுழற்றியடித்த புயல்காற்றில் ஒரு குடும்பத்தின் செல்லப் பிராணியும் அனைவரின் அன்பிற்குரியதுமான மெர்டில் என்ற ஆமை, காணாமல் போனது. புயல் அடங்கி பல வாரங்கள் கழித்து தீவிரத் தேடலுக்குப் பின், அது திரும்பவும் அந்த குடும்பத்திடம் வந்து சேர்ந்துள்ளது.
“ எவ்வளவோ கவலைக்கும், வேதனைக்கும் இழப்பின் துயரத்திற்கும் பிறகு மெர்டிலைப் பார்த்தது பெரிய சந்தோஷத்தை அளித்தது “ என்று மகிழ்ச்சிப் பொங்க கூறிய அதன் உரிமையாளர் டிஃபானி இமானுவேல்,
“ மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறது எங்கள் மெர்டில். நான் அதற்கு உதவவும், அதைப் பராமரிக்கவும், அதற்குத் தேவையான உதவி கிடைப்பதை உறுதி செய்யவும், நான் கூடவே இருப்பேன் என்பது அதற்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும்” என்றார் அவர்..
கொகோமா பகுதியில் புயல் வீசத் தொடங்கிய போது, அங்கிருந்து உடமைகளுடன் வெளியேறிய இமானுவேலின் குடும்பம் மறுபடியும் திரும்பி வந்த போது, இரண்டு ஓக் மரங்கள் மெர்டிலின் கூட்டின் மீது விழுந்திருந்தன. மெர்டிலைக் காணவில்லை.
மெர்டில் காணாமல் போய்விட்டது. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம் மெர்டிலைத் தேட ஆரம்பித்தது.
பல வாரங்கள் கழித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் மெர்டிலை கண்டுபிடிக்கிறார்.
காயமடைந்த மெர்டில் மிஸிஸிபி ஆமைகள் மீட்பு மற்றும் மருத்துவ மையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது.
மருத்துவ மையத்தின் ஸ்தாபகரான கிறிஸ்டி மில்போர்ன், ”…மெர்ட்டிலை கொண்டு வந்த நபர் அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொன்ன போது மகிழ்ச்சியடைந்தேன். அந்த குடும்பத்தினர் மிகவும் அன்போடு மெர்டிலை பார்த்து பேசி இங்கிருந்து வாங்கிக் கொண்டு சென்றனர்” என்றார்.
“எதையும் இழந்து மீண்டும் பெறும் போது தான் அதன் மீதுள்ள பிரியமும் அக்கறையும் அதிகமாகிறது” என்கிறார் டிஃபானி இமானுவேல். இப்போது மெர்டில் டிஃபானியின் அன்பும் கரிசனையுமான பராமரிப்பில் தேறி வருகிறது.

Trending Articles