போதை தலைக்கேறிய நிலையில் சிலர் நம்பமுடியாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம் தான் என்றாலும், துருக்கியில் போதையிலிருந்த ஒருவர் தன்னைத் தானே தேடியலைந்த சம்பவம் வேடிக்கையானதா வேதனையானதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
துருக்கியில் பர்ஸா பகுதியில், 50 வயதான பெய்ஹான் முட்லு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். போதை ஏறியதும், எழுந்து அங்கும் இங்கும் திரிந்தவர் தன்னையுமறியாமல் காட்டுக்குள் சென்று விட்டார். நண்பர்கள் வீடு திரும்பிவிட்ட நிலையில், முட்லுவை காணாத மனைவியும், குடும்பத்தினரும் பல இடங்களில் தேடி விட்டு காவல் துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறையினரும், ஒரு சில தன்னார்வலர்களும் சேர்ந்து முட்லுவை காட்டில் தேட ஆரம்பித்தனர். போதையில் அலைந்த முட்லு, வழியில், தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களைக் கண்டு, தானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். கூட்டத்தோடு கூட்டமாக தன்னிலை அறியாமல் தன் பெயரை தானே கூவி அழைத்துக் கொண்டே அலைந்த முட்லுவுக்கு, சில மணி நேரத்திற்குப் பிறகு, சற்று போதை தெளிந்திருக்க வேண்டும். தன்னார்வலர் ஒருவர் “முட்லூ” என்று உரக்க அழைத்ததும், முட்லு தன்னையறியாமல்,’ நான் இங்கிருக்கிறேன்” என்று பதில் குரல் கொடுத்திருக்கிறார். அதன் பின் காவல்துறையினரும், மற்றவர்களும் இவரைப் பிடித்து விசாரிக்கும் போது தான், தாங்கள் தேடிக் கொண்டிருந்த நபர் தங்களுடன் சேர்ந்து தன்னைத் தானே தேடிக் கொண்டிருந்த வேடிக்கை அவர்களுக்குப் புரிந்தது.
காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போது, “தயவு செய்து எனக்கு பெரிய தண்டனை எதுவும் தந்து விடாதீர்கள், சார். என் அப்பா என்னை கொன்றே போடுவார்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம் முட்லு.
குடி போதையில் இத்தனை வகைகளா?
நானே நானா? யாரோ தானா? – குடிபோதையில் தன்னைத் தானே தேடியலைந்த நபர்!
schedulePublished May 31st 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished May 31st 25