தாய்லாந்து நாட்டின் ஹின் காங் பகுதியில் காட்டில் காளான் பிடுங்க சென்ற ஒருவர் சில குழந்தைகளின் அழுகுரலைக் கேட்டு அதிர்சியுடன் அழுகுரல் வந்த திசைக்கு சென்றார்.
அருகில் சென்ற போதுதான் அவை குழந்தையின் அழுகுரலல்ல பைகளில் கட்டப்பட்டிருக்கும் குரங்கு குட்டிகளின் அழுகுரல் என்று அவருக்கு புரிய வந்தது, அங்கு வீசி எறியப்பட்டிருந்த நீல நிற வலைப் பைகளில் மக்காக் வகை குரங்கு குட்டிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
வனத்துறையினருக்கு இந்த தகவல்கள் தெரிய வந்ததையடுத்து அவர்கள் வந்து பைகளில் கட்டப்பட்டிருந்த 25 குரங்குக் குட்டிகளை மீட்டு வன உயிர் சரணாலயத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தாய்லாந்தில் வளர்ப்புப் பிராணிகளாக வளர்ப்பதற்கும் இறைச்சிக்காகவும் வனவிலங்குகளை கடத்தும் சட்டவிரோத கும்பல்கள் பல செயல்பட்டு வருகின்றன.
தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த குரங்குகள் ஒவ்வொன்றும் 1500 முதல் 2500 பாத் வரைக்கும் விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. சமிபகாலமாக தாய்லாந்து அரசு வன விலங்குகளைக் கடத்துவோருக்கு எதிராக சட்டங்களை கடுமைப் படுத்தியதைத் தொடர்ந்து, குரங்குகளை கடத்துவோர் தங்களிடமிருந்த குரங்குகளை இவ்வாறு கைவிட்டு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.