க்ரீஸ் நாட்டில் வடபகுதியில் தெசலோனிக்கியில் அமைந்த ஒரு ஆர்த்டாக்ஸ் கிறிஸ்தவ மடாலயத்தில் உள்ள துறவிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு துறவி, சிகிட்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இது பன்னெடுங்காலமாக இங்கு இருந்து வரும் கருத்துவேறுபாடுகளின் எதிரொலி என்று சொல்லப் படுகிறது.
175 கிலோமீட்டர் தூரம் கிழக்கில் அமைந்த மவுண்ட் ஆதோஸிலிருந்து முகத்திலும், உடலின் மேற்பகுதியிலும் வெட்டுக்காயங்களும், சிராய்ப்புகளுமாக மருத்துவமனைக்கு வந்த துறவிக்கு தீவிர சிகிட்சை அளிக்கப் படுவதாக தெசலோனிக்கி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மவுன்ட் ஆதோஸ், க்ரீஸில் சுயாட்சி பெற்ற ஒரு மடாலயப் பிராந்தியம். இங்கு, ப்ரார்த்தனையிலும், ஆன்மீகத்திலும் அர்ப்பணிப்புமிக்க துறவிகள் வாழும் பல நூற்றாண்டுகால வரலாறு உள்ள மடாலயங்கள் உள்ளன. பெண்களுக்கு இங்கு வர அனுமதி இல்லை.
இங்குள்ள எஸ்ஃபிக்மெனொ மடாலயம் தான் இங்கு பன்னெடுங்காலமாக தொடரும் கலகங்களுக்கு மையமாக உள்ளது. இந்த மடாலயத் துறவிகள் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று விதிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையையும், திருச்சபையின் ஆணையையும், இவர்கள் மதிப்பதில்லை. எந்த அதிகாரத்தையும் இவர்கள் ஏற்க தயாராகவும் இல்லை.
இந்த துறவிகளின் மனப்பான்மை, இவர்களுக்கும், தேவாலயத்தால் நியமிக்கப்பட்ட மற்ற துறவிகளுக்கும் இடையே மீண்டும் மீண்டும் வன்முறை மோதல்கள், சட்டப் போராட்டங்கள் மற்றும் விநியோகத் தடைகளுக்கு வழிவகுத்தது. மடாலயத்திற்கு வெளியே உள்ள சில ஆதரவாளர்களால் நன்கொடைகளைப் பெற்று 1970களிலிருந்தே மோதல்களை உருவாக்கும் இந்த துறவிகளுக்கு எதிராக நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.
இந்த மோதல்களின் தொடர்ச்சியாகவே, இந்த துறவி தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட துறவியான அவரை, திருச்சபையை எதிர்க்கும் துறவி ஒருவர் தோட்டவேலைக்கான கருவிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்கப் பட்ட இளம் துறவி மரத்தாலான கருவிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு முகத்திலும், விலாப்பகுதியிலும் ஆழமான காயங்களுடன் சிகிட்சைப் பெறுவதாகவும், தாக்கிய துறவியைப் பற்றிய தகவல்கள் காவல்துறையிடம் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் மடத்தின் தலைவர் ஃபாதர் பார்தலோமேயு கூறினார்.
“கலகக் காரர்களுக்கு எதிராக கொடுக்கப் பட்ட தீர்ப்புகளும், ஆணைகளும் செயற்படுத்தப் படவேண்டியது முக்கியம் ” என்றும் அவர் கூறினார்.
எதிர் தரப்பு துறவிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். “நாடகக் காரர்கள் அவர்கள். நடிப்புத் திறமையால் மற்றவர்களின் இரக்கத்தைப்பெறுவதில் அவர்கள் சமர்த்தர்கள்” என்று பதிலடிக் கொடுக்கிறார்கள்…..துறவிகள்!!!