ஒரு டெலிவரி டிரைவருக்கு ஸ்டார்பக்ஸில் வாங்கிய சூடான தேநீர் கொட்டி தோல் ஒட்டு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு உடல் வெந்து போனதால், அவருக்கு 5 கோடி டாலர் (சுமார் 427 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியா ட்ரைவ் த்ரூவில் உள்ள ஒரு ஸ்டார்பக்ஸ் கடையில் வண்டிலிருந்தபடியே சூடான தேரீரை வாங்கிய மைக்கேல் கார்சியா என்ற டெலிவரி ட்ரைவரின் மடியில் தேநீர் கொட்டியதால், அவரது பிறப்புறுப்பு, இடுப்பு மற்றும் தொடைகளின் உட்புறத்தில் மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், வாழ்க்கையையே மாற்றும் அளவுக்கு அவர் உடல் பாதிப்படைந்துள்ளதாகவும் அவரது சட்டக் குழு தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அந்த கடையின் பணிப்பெண் கொதிக்கும் தேநீர் கோப்பைகளை வழியே நீட்டிய போது, பாதுகாப்பு முறைகளை பின்பற்றாததால், கோப்பைகள் சரிந்து தனக்கு காயமேற்பட்டதாக மைக்கேல் கார்சியா நீதிமன்றத்தை அணுகினார். போஸ்ட்மேட்ஸ் டெலிவரி ட்ரைவராக பணிபுரிந்த அவருக்கு 2020ல் நடந்த இந்த சம்பவத்தினால் அவர் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதாகக் கூறிய அவர் தரப்பு வழக்கறிஞர், அவருக்கு சரியான நீதி வழங்கப் பட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரது நிலைக்காக வருந்துவதாகக் கூறிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. “இந்த சம்பவத்தில் நாங்கள் மட்டுமே குற்றவாளி என்பதை எங்களால் ஏற்க முடியாது. விதிக்கப் பட்ட இழப்பீட்டுத் தொகையும் மிக அதிகமாக உள்ளது” என்று கூறிய நிறுவனம், தாங்கள் சூடானப் பொருட்களை விநியோகிக்கும் போது மிக பாதுகாப்பான முறைகளையே கையாள்வதாகவும் தெரிவித்தது.
சூடான தேநீரால் பாதிப்படைந்த வாடிக்கையாளருக்கு 5 கோடி டாலர் இழப்பீடு - ஸ்டார்பக்ஸுக்கு நீதிமன்றம் உத்தரவு!
schedulePublished May 28th 25