ஆறு வயது குழந்தையை விலைக்கு விற்ற தாய்க்கு ஆயுள்தண்டனை.

ஆறு வயது குழந்தையை விலைக்கு விற்ற தாய்க்கு ஆயுள்தண்டனை.

தனது ஆறு வயது மகளை விலைக்கு விற்ற ஒரு தென் ஆஃப்ரிக்கப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கெல்லிஸ்மித் என்னும் அந்த பெண்ணுக்கும், அவருடன் சேர்ந்து இந்த நாசகார வேலையில் ஈடுபட்ட அவரது ஆண்நண்பர் ஜேக்கன் அபோலிஸ் மற்றும் அவர்களது நண்பரான ஸ்டீவனோ வான் ரைன் ஆகிய மூவருக்கும் குழந்தையை விற்றதற்காக ஆயுள் தண்டனையும், மேலும் குழந்தையைக் கடத்தியதற்காக மேலும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப் பட்டுள்ளது.
கெல்லி ஸ்மித்தின் மகள், ஜோஷ்லின் ஃபெப்ரவரி 2024லிருந்து காணாமல் போனதாக அளிக்கப் பட்ட புகார், நாடு முழுவதும் பரபரப்பான செய்தி ஆகி, தென் ஆஃப்ரிக்க காவல்துறை முனைப்புடன் குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தது.
முதலில் குழந்தையைப் பறி கொடுத்த தாய் என்று அனைவரது அனுதாபத்தையும் சம்பாதித்த ராக்கேல் சாண்டெல் ஸ்மித் என்னும் கெல்லி ஸ்மித்துக்கு சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் ஆறுதல் கூறவும், காவல்துறைக்கு குழந்தையைத் தேடும் பணியில் உதவிக் கரம் நீட்டவும் விரைந்து வந்தனர். கேப் டவுனுக்கு வடக்கே மணற்குன்றுகள் நிறைந்த பாலை வெளிகளில் குழந்தையைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது.
மணிகள் தொங்கும் ரெட்டை ஜடைகளுடன் சிரித்துக் கொண்டிருக்கும் ஜோஷ்லினின் புகைப்படம் தென் ஆஃப்ரிக்க செய்திச் சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டது.
குழந்தை காணாமல் போன அன்று, ஜோஷ்லினை தனது நண்பர் அபோலிஸிடம் விட்டு விட்டு தான் வெளியேச் சென்றிருந்ததாக கெல்லி ஸ்மித் சொன்னார்.
ஆனால், எல்லோரையும் நம்ப வைத்த கெல்லி ஸ்மித் கைது செய்யப் பட்ட போது, கதையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் அனைவரும் திகைக்க வைத்தது.
கெல்லி ஸ்மித்தும், அவரது நண்பர்களும், ஆறு வயது ஜோஷ்லினை, பில்லிசூனிய உபயோகத்திற்காக குழந்தையின் உடல்பகுதிகள் வேண்டும் என்று கேட்ட மந்திரவாதிக்கு வெறும் ஆயிரம் டாலர் பணத்திற்கு விற்ற கொடூரத்தைப் பற்றி ஒரு பெண் வெளியே சொல்லி விட, கெல்லியும் நண்பர்களும் குற்றவாளிக் கூண்டில் நின்றனர். அதே பெண் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக சாட்சியும் சொன்னார்.
சல்தானா பே நகரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் பொதுமக்களை கூட்டிச் சேர்த்து, அவர்கள் முன்னிலையில் நீதிபதி குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கினார்.
குழந்தை யாரிடம் விற்கப்பட்டது , குறிப்பாக அவளுக்கு என்ன ஆனது என்பவற்றைப் பற்றி நீதிமன்றத் தீர்ப்பில் எதுவும் சொல்லப் படவில்லை என்றாலும், அவள் அடிமையாக, அல்லது அடிமை போன்ற ஏதோ சில வேலைகளுக்காக விற்கப் பட்டிருக்கிறாள் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
 

Trending Articles