நேபாளத்தில் காத்மாண்டு நகரில் ஒரு அமெரிக்க மலையேற்றவீரர் மக்காலு மலையில் இறந்ததாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய திபெத் எல்லையில் நேபாளத்தில் அமைந்திருக்கும் 8485 மீட்டர் உயரமுள்ள மக்காலு மலை, உலகிலேயே ஐந்தாவது உயரமான மலையாக கருதப்படுகிறது.
மலையேற்ற வீரர்கள் மிகவும் விரும்பும் இந்த மலையில் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகும் மலையேறும் சீஸன் மேமாத கடைசி வரை நீடிக்கும். பருவமழை ஆரம்பித்து விட்டால் மலையேற்றம் கடினமானதாகவும், ஆபத்தானதாகவும் மாறிவிடும். எனவே, இந்த சீசனில் உலகமெங்கும் இருந்து வரும் மலையேற்ற வீரர்களும் உள்ளூர் வழிகாட்டிகளும் இங்கே வந்து குவிந்து விடுவர்.
சென்ற ஞாயிறன்று 39 வயதான அலெக்ஸாண்டர்பான் கோ இந்த மலையின் சரிவுகளில் உயிரிழந்ததாக நேபாள மலையேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிகாகோவைச் சேர்ந்த இவருக்கு, மலையில் மூன்றாவது முகாமிலிருந்து இரண்டாவது முகாமுக்கு கீழிறங்கிவரும் போது மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக மரணம் சம்பவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மலைச் சரிவிலிருந்து காத்மாண்டு நகருக்கு அவர் உடலைக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க மலையேற்ற வீரர் நேபாள மலையில் மரணம்
schedulePublished May 6th 25