மேற்கு வர்ஜீனியாவில் ஜார்ஜ் மற்றும் ஜென்னி ஸாடர் தம்பதியின் பத்து குழந்தைகளில் ஐந்து பேர் திடீரென மாயமாக மறைந்து போன சம்பவம் இன்னும் விடை தெரியாத புதிராக வலம் வரூகிறது.
1945 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்தினம் ஸாடர் குடும்பம் வசித்த வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து விழுந்தது. சம்பவத்திற்குப் பிறகு அவர்களது 10 குழந்தைகளில் ஐந்து பேர் உயிரோடு இருந்தார்கள். மீதியுள்ள ஐந்து பேரும் கிடைத்த எல்லா தகவல்களின் படியும் காற்றில் கரைந்து விட்டார்கள்.
காற்றில் கரைந்து விட்டார்களா என்று நீங்கள் கேட்டால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், எரிந்து தணிந்த வீட்டின் இடிபாட்டுச் சாம்பலில் ஒரு குழந்தையின் எலும்பு கூட கிடைக்கவில்லை. அது அறிவியல் நோக்கில் சாத்தியமே இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் உள்ளே சிக்கி இருக்கலாம் என்ற எண்ணத்தில் இடிபாடுகளை அகற்ற ஜார்ஜ் தமது ட்ரக்கை இயக்கிய போது அது செயலற்று நின்றது. ஃபோன் வயர்கள் வெட்டப் பட்டிருந்தன. ஒரு பெண்மணி அந்த ஐந்து குழந்தைகளும் வீடு தீப்பற்றி எரியும் போது, கடந்து சென்ற காரில் இருந்து எட்டிப் பார்த்ததாகக் கூறினார்; சற்று தூரத்திலுள்ள சார்ல்ஸ்டவுன் என்ற நகரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்யும் பணிப்பெண், குழந்தைகளின் புகைப்படங்களை செய்தி தாளில் பார்த்த போது சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குப் பின் தான் அந்த குழந்தைகளில் நான்கு பேரை தனது ஹோட்டலில் பார்த்ததாகக் கூறினார். அந்த குழந்தைகளுடன் வந்த இரு ஆண்களும், பெண்களும் இதாலியர்களைப் போல இருந்ததாகக் கூறினார். குழந்தைகளுடன் பேச முயன்ற போது உடன் வந்த மனிதர் எரிச்சலுடன் தடுத்து விட்டதாகவும் கூறினார்.
ஸாடர் குடும்பம் குழந்தைகள் கடத்தப் பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. இந்த குடும்பம் இதாலியிலிருந்து வந்து குடியேறியதாக இருந்ததால் இது, உள்ளூர் மாஃபியா கும்பலில் ஜார்ஜை கட்டாயப்படுத்தி சேர்க்கும் முயற்சியாக இருக்கலாம். பணம் பறிக்கும் நோக்கமாகவும் இருக்கலாம் அல்லது ஒருவேளை ஜார்ஜ் முஸோலினியைப் பற்றியும், இதாலியின் பாசிஸ அரசைப் பற்றியும் வெளிப்படையாக விமர்சித்ததால் ஏற்பட்ட விளைவாகவும் இருக்கலாம். 1950களிலிருந்து 1980களில் ஜென்னி ஸாடர் இறக்கும் வரை, இந்த குடும்பம், ஸ்டேட் ரூட் 16 சாலையில், காணாமல் போன ஐந்து குழந்தைகளின் புகைப்படங்களுடன், அவர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு கொடுக்கும் பரிசு விபரங்களையும் தாங்கிய பில்போர்ட் ஒன்றை வைத்திருந்தது. பல்வேறுமுடிச்சுகளும் திருப்பங்களும் கொண்ட இந்த புதிருக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஸாடர் குடும்பத்தில் உயிரோடு இருக்கும் கடைசி வாரிசான சில்வியா( வயது 69) இன்னும் கூட தன் உடன் பிறந்தவர்கள் நெருப்பில் கருகி சாகவில்லை என்றே நம்புகிறார்.