சில கேடி பில்லா கில்லாடி ரங்காக்கள் தங்கள் பிறந்த நாளை நண்பர்கள் சூழ அலப்பறை செய்து பட்டாக்கத்தியால் கேக்குகளை வெட்டி போலிஸ் காவலுக்கு போனதை பார்த்திருக்கிறோம்.
அதே போன்று தன் பிறந்த நாள் கேக்கையும் வாளால் வெட்டி கொண்டாடிய ஒருவர் இரு தினங்களுக்கு முன், பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் சிக்கபல்லப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில்குமார் என்ற ஒரு ஆட்டோ டிரைவர் தன் பிறந்த நாளையொட்டி நண்பர்களும், குடும்பமும் புடை சூழ, துப்பாக்கிக் குண்டுகளை அடுக்கியது போன்ற அமைப்பில் வடிவமைக்கப் பட்ட கேக்கை நீண்ட வாள் கொண்டு வெட்டி, பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்த வீடியோவை அவர் சமுக ஊடகங்களில் பகிர அந்த வீடியோ வைரலானது . வீடியோ காவல்துறை கவனத்துக்கு வந்ததும் போலிசார் அனில் குமாரை தேடிவந்து பிடித்துச் சென்றனர்.
இதுவரை எந்த குற்ற பின்னணியும் இல்லாத அனில்குமார், தாம் பிறந்தநாள் உற்சாகத்தில் அவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.
”முறையான உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாளைப் போன்ற பெரிய ஆயுதங்களை பயன்படுத்துவது இந்திய ஆயுதச் சட்டத்திற்கு எதிரானது. ஆகையால் அது ஒரு குற்றச் செய்லாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே பயத்தையும், பீதியையும் தூண்டும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது” என்று எச்சரித்த காவல்துறையினர் அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.