பிரபல இசை பின்னணி பாடகி உமா ரமணன் மறைந்தார்.

thumb_upLike
commentComments
shareShare

பிரபல இசை பின்னணி பாடகி உமா ரமணன் மறைந்தார்.

 

பூங்கதவே தாழ்திறவாய் என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல இசை பின்னணி பாடகியான உமா ரமணன் தனது 69 வயதில் உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 9.30 மணி அளவில் காலமானார்.

தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்த உமா, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், நிழல்கள், திருப்பாச்சி, தில்லு முள்ளு போன்ற படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இளையராஜா, வித்யாசாகர், எம்எஸ்வி போன்ற இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்திய இவர், இளையராஜா இசையில் பாடிய ஆகாய வெண்ணிலாவே பாடல், பன்னீர் புஸ்பங்கள் படத்தின் ஆனந்த ராகம் பாடலை பாடி ரசிகர் மனதில் தனி இடத்தை பிடித்தார். பிரபல நடன கலைஞரான பத்மா சுப்ரமணியத்திடம் பயிற்சியும் பெற்றுள்ளார்.நடன கலைஞர் மற்றும் மேடை நிகழ்ச்சி கலைஞராக புகழ் பெற்றவர்.

தன்னுடைய கணவர் ஏவி ரமணனுடன் இணைந்து கச்சேரியில் பாடியுள்ளார். தனது 35 வருட இசை வாழ்க்கையில் 6000 மேடை கச்சேரியில் பாடியுள்ளார்.பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி விருதுகளையம் வெகுமதிகளையும் பெற்றவர். பழனி விஜயலக்ஷ்மியிடம் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்று முடித்தவர். ரமணனின் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பத்து ஆண்டுகள் தொடர்ந்தார். தன் வாழ்நாள் முழுவதும் இசையால் வாழ்ந்த இசைமதி வான் நிலவில் வாழவே தன்னை மறைத்து கொண்டது.

உமா ரமணன் பாடல்கள் - https://www.raaga.com/tamil/album/remembering-uma-ramanan-songs-TC0002035-play

NewsGlitz in Social Media
Share to your pages!
Close