இந்தியாவின் தேசியப் பறவை இன்று இங்கிலாந்தின் செல்லப் பறவை!

thumb_upLike
commentComments
shareShare

  இந்தியாவின் தேசியப் பறவை இன்று இங்கிலாந்தின்  செல்லப் பறவை!


இந்தியாவின் தேசிய பறவையான மயில் இங்கிலாந்தில் செல்லப் பறவையாக வளர்க்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
இங்கிலாந்தின் ஸ்டஃபோர்ட்ஷயர் கிராமத்தில் செல்லப் பிள்ளையாக வளரும் பெர்சி என்னும் மயில், வசந்த கால இனச்சேர்க்கைப் பருவத்தில் செய்யும் குறும்புகளுக்கு அளவே இல்லை என்று அதன் உரிமையாளர் ஜேன் அக்ராய்ட் பெருமிதத்துடன் அலுத்துக் கொள்கிறார்.
பெர்சியின் இணைப் பறவையான பென்னியும் அவற்றின் இரண்டு பெண்குஞ்சுகளும் அமைதியானவை என்று கூறும் இவர், பெர்சி எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், "அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் 99.9% பேரின் இதயத்திலும், பெர்சிக்கு தனி இடம் உண்டு என்று எனக்குத் தெரியும்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார், ஜேன் அக்ராய்ட்.
இங்கிலாந்து மண்ணில் யாரும் எதிர்பார்க்காத பறவையான மயிலை இவர் வளர்க்க ஆரம்பித்தது எப்படி?
விடுமுறைக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் போதும், பல பூங்காக்களிலும் மயில்களை பார்த்து தான் மயங்கி விட்டதாக கூறும் அவர், தம் கணவருடன் ஆலோசித்து இருவரும் ஒரு மயிலை வாங்க தீர்மானித்ததாகக் கூறினார். அவர் வசிக்கும் பகுதி அதிக நெருக்கடி இல்லாததாகவும், ஏராளமான வயல்வெளிகள் உள்ள இடமாகவும் இருந்ததால் மயில்களுக்கு அது பாதுகாப்பான இடம் என்று நினைத்தனர் அக்ராய்ட் தம்பதி.
செல்லப் பிள்ளையாக வளர ஆரம்பித்த பெர்சியின் அட்டகாசங்கள் அளவில்லாதவை. அதுவும் வசந்த கால இனச்சேர்க்கைப் பருவத்தில் கூரை மீது ஏறி கூவும் கூவல் ஊர் முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். பக்கத்து வீட்டுக் கதவு திறந்திருந்தால், கிடுகிடுவென உள்ளே போய் அவர்கள் வீட்டுப் படுக்கையில் ஏறி நிற்கும். அடிக்கடி இது பூசணிக்காய் தோட்டங்களில் செடிகளையும், காய்களையும் கொத்தி நாசப்படுத்தும் விடியோக்கள் ஜேன் அக்ராய்டின் மொபைல் ஃபோனுக்கு வந்து கொண்டே இருக்கும். ஆனால் இனச்சேர்க்கை பருவம் முடிந்துவிட்டால், பெர்சி அமைதியான கம்பீரத்துடன் வலம் வரத் தொடங்கி விடும் என்று ஜேன் கூறினார்.
ஸ்டஃபோர்ட்ஷ்யர் கிராமத்தில் தனக்குத் தெரிய இன்னும் மூன்று பேர் மயில்களை வீட்டில் வளர்ப்பதாகக் கூறும் அக்ராய்டு, அவற்றில் ஒரு ஆண்மயில், பெர்சியின் உற்ற நண்பன் என்றும், பெர்சியை வெளியே அனுப்பாவிட்டால் அது பெர்சியைத் தேடி அங்கு வந்து விடும் என்றும் கூறினார்.

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close