125 ஆண்டுகளுக்கு முன் விக்டோரியா மகாராணியால் போர்வீரர்களுக்கு அனுப்பப் பட்ட சாக்லேட் பெட்டி ஒன்று வரும் ஜூன் மாதம் பிரிஸ்டோலில் ஏலம் விடப் படவுள்ளது- அதன் மதிப்பு 400பவுன் வரை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒரு சில வெள்ளிக் காகித உறையின் துண்டுகளுடன் அதே பெட்டியில் மிச்சமிருக்கும் சாக்கேல்ட் 1900 ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவில் போயர் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் படைக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்று பிரிஸ்டோலில் உள்ள ஏல முகவர் கருத்து தெரிவித்தார்.
இந்த ஏல முகமையைச் சேர்ந்த இராணுவ நிபுணரான லூசி மெக்கொர்ட் , ”1900களில் இது கிடைக்கவே கிடைக்காத இனிப்பாக இருந்திருக்கும். இதை சாப்பிடாமல் வைத்திருந்தவரின் மன உறுதியை நான் பாராட்டுகிறேன்” என்றார் வேடிக்கையாக..!
1899 ஆம் ஆண்டு சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களான ஜே எஸ் ஃப்ரை அண்ட் சன்ஸ், கேட்பரி ப்ரதர்ஸ் லிமிடெட் மற்றும் ரவுண்ட்ரீ அண்ட் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றிற்கு மகாராணி இந்த சிறப்பான சாக்லேட் பெட்டிகளை செய்வதற்காக ஆர்டர் கொடுத்தார்” என்றும் இந்த ஏலமுகவர்கள் குறிப்பிட்டனர்.
சாக்லேட் பெட்டிகளின் மீது “புத்தாண்டு நல் வாழ்த்துகள்” என்ற வார்த்தைகள் பொறிக்கப் பட்டிருந்தன. 1900 ஆண்டின் முடிவிற்குள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் வீரர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டிருந்தன.
ஏலமுகவர் ஆண்டி ஸ்டோவ் இதன் தோற்றம் பற்றி கூறுகையில்,” இதை நான் சாப்பிட மாட்டேன். ஆனால், அதன் வயதை கவனத்தில் கொள்ளும் போது அது நன்றாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது.” என்றார்.
அந்த சாக்லேட்டுகளில் பெரும்பாலானவை உடனடியாக தின்னப் பட்டிருக்கும். சில வீட்டிற்கோ அல்லது காயமடைந்த வீரர்கள் இருக்கும் மருத்துவமனைக்கோ அனுப்பப் பட்டிருக்கும்.
” இது கிடைப்பதற்கரிதான பழம்பொருள்” என்று கூறிய ஸ்டோவ், “ இந்த பெட்டி வாழ்ந்து முடித்த 125 வருடங்களில் சில போர்களைக் கண்டிருக்கும். ஒருவேளை ஓரிரு முறை அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அங்கும் இங்கும் போய் வந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.
250 பவுண்ட் முதல் 400 பவுண்ட் வரை ஏலம் விடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிற இந்த சாக்லேட் பார் “வரலாற்று சிறப்புமிக்கப் பொருளை வேண்டுபவர்களைக் கவரலாம் அல்லது நண்பர்களை விருந்துக்கு அழைத்து பெருமையடிக்க விரும்புபவர்களையும் ஈர்க்கலாம். இராணுவப் பொருட்களை விரும்பி சேகரிப்பவர்களும் இதை வாங்கலாம். அதனால், இது பரவலாக விரும்பப்படும் பொருளாகத் தான் இருக்கிறது “என்றார் அவர்.